உப்பிற்கு தட்டுப்பாடு - 450 முதல் 500 ரூபாய் தொட்ட உப்பின் விலை
இலங்கை (Srilanka) சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகார சபைக்கு முறைப்பாடு
இதேவேளை, சந்தையில் உப்பு ஒரு கிலோகிராம் உப்பு 450 முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்ய வர்த்தகர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உப்பு விலை தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உப்பு விநியோகம்
இந்நிலையில், உப்பு விநியோகம் குறித்து வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது.
179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் (10) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

