இந்த நாடு அழியப்போகின்றது! சர்வதேசத்தின் பிடிக்குள் இலங்கை
ஜெனிவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்துள்ளது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கூறியதாவது, ஜெனிவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைகளுக்கான, அவர்கள் மீது புரியப்பட்ட போர் குற்றங்களுக்கு எதிரான, அவர்களுக்கு நீதிக்கு புறம்பாக நடைபெற்ற கொலைகளுக்கு எதிராக, சொத்தழிவுகளுக்கு எதிராக ஒரு நீதி வேண்டுமென்ற அடிப்படையில்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் உரையாற்றிய பல இடங்களில் இந்த நாட்டில் ஒரு தமிழினம் இருப்பதாக,அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக கூறியதுமில்லை. ஏற்றுக்கொண்டதுமில்லை. அவரின் கிராம மட்ட சந்திப்புக்கள் கூட இதுவரை வடக்கிலோ கிழக்கிலோ நடந்ததுமில்லை. அமைச்சர்கள் இனவாதத்தை கக்குகின்றார்கள்.
இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டை கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்றார்.