சொல்லிசைப் பாடகரின் விடுதலை ஜனாதிபதியின் கைகளில் : சிறீதரன் தெரிவிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்க முடியாதுள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை சிவஞானம் சிறீதரன் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்று இன்று (08) பார்வையிட்டதுடன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதிக்கு கடிதம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதனால் நீண்ட நாட்கள் அவருக்கான தடைச்சட்டக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிறைச்சாலைக்கு சென்று அவரைப் பார்வையிட்டு அவரோடு பேசியிருந்தேன்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் எழுத்துமூலமாக ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தேன். அத்துடன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கின்றோம்.
நாளையில் இருந்து நான்கு நாட்களுக்கு நாடாளுமன்றம் இருப்பதனால் இந்த நாட்களில் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து இவருடைய விடுதலை தொடர்பில் ஒரு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.
ஏனெனில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தான் இதற்கான பிணையை எடுக்கக்கூடிய வழிமுறைகள் உண்டு.
விடுதலை செய்ய வேண்டும்
மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான பிணையை வழங்க முடியாதுள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் கருணையின் அடிப்படையில் உடனடியான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதற்காக ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் எழுத்துமூலமாக கடிதம் அனுப்பி அவரை சந்திப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம். அந்த இளைஞன் ஒரு பிழையானவர் அல்ல. அவர் தன்னுடைய பாடலை சொல்லிசையாக சொல்லியிருக்கின்றார்.
அதனை மொழி பெயர்த்தவர்கள் மிகப் பிரமாண்டமான அளவிலே அதற்கொரு வடிவத்தைக் கொடுத்து அவரைக் கைது செய்வதற்காக தூண்டியிருக்கின்றார்கள்.
ஆகவே அதை மொழி பெயர்த்தவர்களும் அதனை பிழையாக மொழி பெயர்த்ததாகவே தோன்றுகின்றது. ஆகவே அதனுடைய உண்மையை உணர்ந்து அரசாங்கம் விரைவாக அந்த இளைஞனை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான முழு முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கின்றோம்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 13 மணி நேரம் முன்