பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உடல்நல குறைவு காரணமாக கோயில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
பங்காரு அடிகளாரின் மரணச் செய்தியை அறிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
சித்தர் முறைப்படி நல்லடக்கம்
இறுதி சடங்கு நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
