ஹரக் கட்டாவிடம் பெற்ற பெருந்தொகை பணம்: விசாரணையில் சிக்கபோகும் ரணிலின் சகா!
பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற 'ஹரக் கட்டா'வின் கொலையைத் தடுக்கவும், அவரது தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்கவும், அவரைப் பூசா சிறையிலிருந்து ஒரு வழக்கமான சிறைக்கு மாற்றவும் பெறப்பட்ட 12 கோடி (1200 இலட்சம்) ரூபாய் இலஞ்சம் பெறுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தின் விவரங்களை இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாகவும், தேசியப் பாதுகாப்புக்கான சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றிய சாகல ரத்நாயக்க உட்பட, நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அமைச்சு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட காவல்துறை தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளின்படி, இந்த சம்பவத்தின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான ஹெரத் முதியன்செலகே கொனரகேதர நிர்மனா இந்திரஜித் பண்டார என்ற 'ஹெர்பி' அளித்த வாக்குமூலத்தின் மூலம் இந்த பெரிய அளவிலான ஊழல் செயல்முறை வெளிப்பட்டுள்ளது.
மாகந்துர மதுஷின் நிலை
இது குறித்து வாக்குமூலங்களில் பின்வரும் விடயங்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித நிர்மல ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகிய சந்தேக நபர்கள், துபாயில் தன்னைச் சந்தித்து, ஹரக் கட்டாவின் மனைவியுடன் இந்த இலஞ்சத் திட்டத்தைத் தீட்டியதை அந்த சாட்சி விவரித்துள்ளார்.
காவல்துறை காவலில் வைத்து கொல்லப்பட்ட 'மாகந்துர மதுஷ்' என்பவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவூட்டி ஹரக் கட்டாவின் மனைவியை சந்தேக நபர்கள் மிரட்டியதோடு, இந்தப் பணத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
சாட்சியின் வாக்குமூலத்தின்படி, ஹரக் கட்டாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, அப்போதைய காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னக்கோனுக்கு 500 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்று சந்தேக நபர்கள் ஹரக் கட்டாவின் மனைவியிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மூன்று மாதங்களுக்குள் ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை (DO) நீக்குவதற்காக, அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு மேலும் 500 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அந்தப் பணம் அவருக்கு நேரடியாகக் கிடைக்காது என்பதால், சாகல ரத்நாயக்க மூலம் இவ்விடயம் வேறு ஒரு வழியில் கையாளப்படும் என்றும் அவர்கள் ஹரக் கட்டாவின் மனைவியிடம் விளக்கியுள்ளனர்.
500 மில்லியன் ரூபா
இது தவிர, ஹரக் கட்டாவை கேகாலை சிறை போன்ற ஒரு வழக்கமான சிறைக்கு மாற்றுவதற்காக நீதி மற்றும் சிறைகள் அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு 500 மில்லியன் ரூபாயும், ஹரக் கட்டா தடுப்புக் காவலில் இருந்தபோது அவரது பணிக்காக பிரசாத் ரணசிங்க மற்றும் துசித கஹகல்ல உள்ளிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளுக்கு மேலும் 500 மில்லியன் ரூபாயும் என அந்த இலஞ்சப் பணம் பிரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, ரகித ராஜபக்ச என்ற சந்தேக நபர், பணத்தை விரைவில் ஏற்பாடு செய்வதற்காக, தனது தந்தை தரப்பிலும் சட்டத்துறைத் தரப்பிலும் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் கவனித்துக் கொள்வதாகக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஆரம்பத்தில் 300 மில்லியன் ரூபாயைக் கோரியபோதிலும், ஹரக் கட்டாவின் மனைவி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால், அவர் பின்னர் அதை 200 மில்லியன் ரூபாயாகக் குறைத்து, 120 மில்லியன் ரூபாயை முன்பணமாகக் கோரியுள்ளார்.
அதன்படி, ஹரக் கட்டாவின் மனைவி ஆரம்பத்தில் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள திர்ஹம்களை 'ஹெர்பி'யின் வீட்டிற்குக் எடுத்துசென்றுள்ளார்.
உண்டியல் முறை
மேலும், சந்தேக நபர்களான ரகித ராஜபக்ச, சரித் மற்றும் அருண ஆகியோர் உண்டியல் முறை மூலம் அந்தப் பணத்தை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்திததாக கூறப்படுகிறது.

பின்னர், மேலும் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள திர்ஹம்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், சந்தேக நபர்கள் வாக்குறுதியளித்த எந்தப் பணிகளையும் நிறைவேற்றாததால், ஹரக் கட்டாவின் மனைவி கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.
அப்போது, சந்தேக நபரான சரித் அபேசிங்க, சம்பந்தப்பட்ட பணத்தின் ஒரு பகுதி ரகித ராஜபக்சவுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதால், அதை மீட்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்றிலையில் ஹரக் கட்டாவின் மனைவிக்கு ரூ. 20 லட்சத்தை மட்டுமே திருப்பிக் கொடுக்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில், மேலதிக விசாரணைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்