இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது இந்தப் பூமியில் என்றும் மறக்க முடியாதவொரு வடுவாக இருப்பதுடன் கடந்த 11ஆம் நாள் முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஈழத் தமிழ் தேசத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
அத்துடன் உலகத்தில் தமிழ் மக்கள் வாழுகின்ற தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுவதுடன் குறிப்பாக கனடா நாட்டில் கடந்த 11 ஆம் திகதி முதல் கனேடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நினைவுகொள்ளப்படுகிறது.
உலகில் இனப்படுகொலைகளையும் நினைவேந்தல்களையும் நினைவுகொள்வது என்பது எதற்காக என்ற கேள்விக்கு கனடா நாட்டின் தீர்மானம் பெரும் பதிலாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையாகவும் இருக்கிறது.
முள்ளிவாய்க்காலுக்கு முந்தைய இனப்படுகொலையில் சரியாக பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சந்தித்திருந்தோம் அத்தோடு இலங்கைத் தீவில் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்த நிலையில் திட்டமிட்ட வகையில் பல்வேறு கால கட்டங்களிலும் இனப்படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஈழத் தமிழ் மக்கள் உரிமை
1956 தனிச்சிங்கள சட்டம் என்பது ஈழத் தமிழ் இனத்தை திட்டமிட்டு ஒடுக்கும் அரச தீர்மானமாக கொண்டுவரப்பட்ட பின்னணியில் 1958 இல் திட்டமிட்ட இனப்படுகொலை இடம்பெற்றதிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் இழந்த உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் மற்றும் சுயமரியாதைக்காகவும் குரல் கொடுத்தும் போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தவேளையெல்லாம் அதனை ஒடுக்க இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே நேரத்தில் இந்த இனப்படுகொலைகளை எல்லாம் சிறிலங்கா அரசும் சிங்களப் பேரினவாத சக்திகளும் இனக்கலவரங்கள் என்றே அழைத்து, அதனையே தமிழ் மக்களையும் அழைக்கத் தூண்டின.

இனக்கலவரம் என்பது இரண்டு இனங்கள் இனவாத நோக்கில் பரஸ்பர மோதிக்கொள்வதாகும் ஆனால் 1958 இனப்படுகொலையாக இருக்கட்டும் மற்றும் 1983 இனப்படுகொலையாக இருக்கட்டும், ஈழத் தமிழ் மக்களே பேரினவாத இனவழிப்பாளர்கால் தேடித் தேடி இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
எந்த இடத்திலும் ஈழத் தமிழ் மக்கள் எவரும் சிங்களவர்களை தாக்கியதும் கொன்றதும் இடம்பெற்றதேயில்லை ஆனால் பெரும்பான்மையினம், சிறுபான்மையினத்தை தேடித் தேடி ஒவ்வொரு காலகட்டத்திலும் சில சூழ்நிலைகைளை திட்டமிட்டு உருவாக்கி திட்டமிட்டு இனப்படுகொலைகளை செய்து வந்திருப்பதே வரலாறு ஆகும்.
கடலாய் அழிக்கப்பட்ட இனம் ஈழத் தமிழ் மக்கள் ஜனநயாக வழியிலும் அற வழியியிலும் தம்மை தாம் ஆளும் உரிமைக்காக முன்னெடுத்த போராட்டங்களுக்கும் இனப்படுகொலைகள்தான் பதிலாக இருந்தன என்பது பல உண்மைகளையும் சிறிலங்கா அரசினது கோர முகத்தையும் சிங்களப் பேரினவாத சக்திகளின் மனிதகுல விரோத அணுகுமுறைகளையும் நமக்கு உணர்த்துகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
இந்த சூழ்நிலையில்தான் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன் நில ஆக்கிரமிப்பு, இனப்படுகொலைகள் மற்றும் தம்மை தாம் ஆளுகின்ற தேசம் என அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டம் தமிழர்களுக்கு சாத்தியப்படுத்தியிருந்தது.
இதன் வழியாக ஈழத் தமிழ் மக்கள் தாம் வாழ விரும்புகின்ற கனவு தேசத்தை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார்கள் அத்தோடு சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களை வரலாறு முழுவதும் மனிதகுலத்திற்கு விரோதமான முறையில் ஒடுக்கி வந்த நிலையில் மிகவும் உன்னதமான வழிமுறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் கடலைப் பிழிந்தேனும் மீன்களை கொல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழ் மக்களை ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முள்ளிவாய்க்காலில் சிதைத்தது சிறிலங்கா.
கடல் சூழ் முள்ளிவாய்க்காலில் கடல் நிலத்தில் கடல் போலச் சனங்கள் அழிக்கப்பட்டார்கள் என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம் அத்தோடு முள்ளிவாய்க்கால் நிலத்தையும் நந்திக்கடலையும் சாட்சியாக வைத்தே இந்த இனப்படுகொலை நிறைவேற்றப்பட்டது.
இனப்படுகொலையின் நீதிக்கான போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு நடப்பது இனப்படுகொலை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழுத்தமாக கூறி வந்ததுடன், அதன் விளைவாகவே தமது இயக்கம் ஈழத் தமிழர்களின் தன்னெழுச்சியாக உருப்பெற்றது என்பதையும் குறிப்பிட்டனர்.
இனப்படுகொலைக்கான நீதி
அத்துடன் முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய காலத்தில் இனப்படுகொலைக்கான நீதியை வென்று உரிமைகளை வெல்லும் வழியையும் ஆயுதத்தையும் போராளிகள் மக்களின் கரங்களில் ஒப்படைத்தனர்.
போரில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களாகவும் போரில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் மற்றும் சிறிலங்கா அரசிடம் போரின் இறுதியில் கையளிக்கப்பட்டவர்களுக்காகவும் ஈழ மண்ணில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது எனவே இனப்படுகொலைக்கான நீதியை நோக்கியதாகவே முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய நமது போராட்டம் நீள்கின்றது.

அந்த வகையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமினால் நிறைவேற்றப்பட்ட நிலையில் வடக்கு மாகாண சபையிலும் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தருணத்தில் கனேடிய அரசாங்கம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் உலகில் முதன் முதலில் தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொண்ட முன்னூதாரணமாக நாடாக நீதியின் முகமாக கனடா விளங்குகிறது.
ஏன் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம்? அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது தொடர்பாக தெரவிக்கையில், “நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் அத்தோடு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன.
மனித உரிமைகள் சமாதானம்
பலர் காணாமல்போனார்கள், காயமடைந்தார்கள் மற்றும் இடம்பெயர்ந்தார்கள் அத்தோடு கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன.
அத்துடன், கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன.

இதன் காரணமாகவே கடந்த வருடம் மே18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் அத்தோடு மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிற்காக குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது” என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கனடா நாட்டில் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அறிவூட்டல் வாரம் கடந்த 11ஆம் நாள் முதல் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த விடயங்களை கனேடிய மக்களும் பிற நாட்டவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் துணையாக இருப்பதும் உலகில் இதுபோன்ற இனப்படுகொலைகள் வரும் காலத்தில் நடக்காதிருக்கவும் இந்த இனப்படுகொலை நினைவேந்தல் அறிவூட்டல் வாரத்தை கனடா பிரகடனப்படுத்தியுள்ளது.
உண்மையில் ஒரு அறிவூட்டல் ஆயுதமாக விழிப்புணர்வாக தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை பிரகடனப்படுத்திய கனேடிய தேசத்தின் கரங்களை நன்றியுடன் பற்றுவதுடன் கனடாவை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அறிவூட்டும் பணிகளில் நாமும் செயற்படுவோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |