சிறுபான்மை பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்கும் சிங்கள அரசாங்கங்கள்! ரிஷாட் வெளிப்படை
எந்த அரசாங்கமானாலும் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்து வைக்க முயற்சிக்காது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டு வந்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பிரேரணையில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பட்டுள்ளார்.
கடந்த கால அனுபவங்கள்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்வுகாண முடியாது.எந்த அரசாங்கமானாலும் எமது சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்து வைக்க முயற்சிக்காது.
கடந்த கால அனுபவங்களூடாக நாங்கள் புரிந்து வைத்துள்ள உண்மையே இது, ஓட்டமாவடி பிரதேச சபையை எமது கட்சியே வென்றிருந்தது.எனினும் எங்களை ஆட்சியமைக்க விடாமல், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன.
இவ்விடயத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வு போன்று ஏனைய காணிப்பிரச்சினை மற்றும் கல்விப் பிரச்சினைகளில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியாது.
தமிழ், முஸ்லிம் தலைமைகளுக்கான அழைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் சமூங்களின் அக முரண்பாடுகளை பேசித்தீர்க்க முடியும்.கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் இழுத்தடிக்க வேண்டியதில்லை. சமூகத் தலைமைகள் இணைந்தால் இதையும் இலகுவாகத் தீர்க்கலாம்.
தனிநாடு,சமஷ்டி கோரிப் போராடிய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் உள்ளக விடயங்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமுமில்லை. நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை.
எனவே,நமது உள்ளக பிரச்சினைகளை நாமே பேசித்தீர்த்துக் கொள்வோம். தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால், எல்லா உள்ளக முரண்பாடுகளுக்கும் முடிவு கிடைக்கும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
