யாழில் சிங்கள குடியேற்றங்கள் : இளங்குமரனுடன் அர்ச்சுனா, கஜேந்திரகுமார் கடும் வாக்குவாதம்
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் நேற்று (28) நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்படி வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிங்கள வீட்டுத் திட்டங்கள் தற்போது யாழில் வழங்கப்படுவதாகவும், அதனை நினைத்தபடி விற்பனை செய்வதாகவும் தமிழ் மக்கள் பலர் வீடுகள் இன்றி இன்றும் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
காணி அபகரிப்பு வர்த்தமானி
இதற்கு பதில் வழங்கிய இளங்குமரன், காணி உறுதிப்பத்திரம் வழங்கிய பின்னர் அதனை விற்பனை செய்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குள் செல்வது சாத்தியம் அற்றது என சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட கஜேந்திரகுமார், “உங்கள் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் காணியை அபகரிக்க ஒரு வர்த்தமானியை வெளியிட்டீர்கள். அதில் 3 மாதங்களுக்குள் காணிகள் தொடர்பில் உறுதிப்படுத்தாவிடில் காணிகள் அரசுடமையாக்கப்படும் என கூறியிருந்தீர்கள்.
இதில் குறிப்பாக வெளிநாட்டில் புலம்பெயர்ந்து இருக்கும் காணி உரிமையாளர்களில் 90 சதவீதமானோர் இலங்கை அரசின் அச்சுறுத்தலால் நாடு கடந்து சென்றவர்கள்.
சபையில் வாக்குவாதம்
அவ்வாறு இருக்கையில் போலியாக பல விடயங்களை கூறி சிங்கள குடியிருப்புக்கள் வருவதற்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணியை அபகரிக்கின்றது. குறிப்பாக இங்கு காலம் காலமாக உள்ளவர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்காது இருப்பது எவ்விதத்தில் நியாயம் மிக்கது?

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட காணிகள் வீட்டுத்திட்டங்களில் குடியிருப்பாளர்கள் இல்லாவிட்டால் அதனை பெற்று தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்” என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த அர்ச்சுனா, சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 500க்கும் அதிகமான மக்கள் வீடுகள் இன்றி இருக்கின்ற நிலையில் தற்போது 250 வீடுகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகின்றமை ஏன் என்பதே எனது கேள்வி என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |