“அதிகார இனவெறியை தமிழர்கள் மீது காட்டாதே” - வவுனியாவில் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் (படங்கள்)
வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“எங்கள் நிலம் எமக்கு வேண்டும்” - “தொல்பொருள் திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே” - “அதிகார இனவெறியை தமிழர்கள் மீது காட்டாதே” - “சிங்கள் குடியேற்றத்தை நிறுத்து” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேளை சிறிலங்கா அரச தலைவரிற்கு அனுப்பும் வைப்பதற்காக மகஜர் ஒன்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழ அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேசசபை தலைவர்களான ச.தணிகாசலம், எஸ். யோகராசா, நகரசபை தலைவர் இ.கௌதமன், புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சி சார்பில் நி.பிரதீபன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் ம.தியாகராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.





