பாதுகாப்பு தரப்பினரின்றி தனியாகவிருந்த நாமல்- பாதுகாவலர்களுடன் புடைசூழச் சென்ற பிரமுகரால் ஆட்டம் கண்ட உணவகம்!
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு தரப்பினர் யாரும் இல்லாது தனிமையில் இருந்து உணவு அருந்திக்கொண்டிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது மனைவியுடன் எவ்வித பாதுகாப்பும் இன்றி சாதாரண தம்பதியினர் போல் உணவருந்திக்கொண்டிருந்துள்ளார்.
நாமல் ராஜபக்ச நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர், அவரது தந்தை நாட்டின் பிரதமர், சித்தப்பா நாட்டின் அரச தலைவர். இப்படி இருக்கும் போது, அவர் தனது வாகனத்தில் மனைவியுடன் எவ்வித பாதுகாப்பும் இன்றி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் என்ற வகையில் கடும் பணி சுமையில் இருந்து சில மணி நேரம் விடுபட்டு, சுதந்திரமாக நாமல் ராஜபக்ச, சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒருவர், அமைச்சர் அங்கு இருப்பது பற்றி ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததும், அந்த அதிமுக்கிய பிரமுகர், நாமலை சந்திக்க அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அதிமுக்கிய நபருக்கான பாதுகாப்பு, காவல்துறை, தனிப்பட்ட பாதுகாப்பாளர்களுடன் ஆறு வாகனங்களுடனும் குறித்த நபர் அமைச்சரை சந்திக்க சென்றுள்ளார்.
இவ்வாறு நாமலை சந்திக்க ஆறு வாகனங்கள் மற்றும் பாதுகாவலர்கள் புடைசூழ சென்றிருந்த நபர் வேறு யாருமல்ல, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் கோட்டாபயவின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர். துமிந்த சில்வா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முழு ஹோட்டலும் ஆட்டம் கண்டு போனதுடன் துமிந்த தொடர்பில் உஷார் நிலையில் இருந்தனர். துமிந்த சில்வா, நாமல் உணவருந்திக் கொண்டிருந்த மேசைக்கு அருகில் சென்றார். அத்துடன் நாமல் ராஜபக்சவுக்கு தெரியும்படியும் அமர்ந்திருந்தார்.
எனினும் அந்த நபர் பற்றி பெரிதாக கவனத்தில் கொள்ளாத நாமல், உணவருந்தி முடிந்த பின்னர், மேசையில் இருந்து எழுந்து செல்லும் போது, அவருக்கு அருகில் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு, சாதாரணமாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.