நித்திரைக்குச் சென்ற அக்காவும் தம்பியும் அதிகாலையில் சடலமாக மீட்பு!
பூகொட, யகம்பே பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து இரண்டு சடலங்கள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
43 வயதுடைய திருமணமாகாத சகோதரி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்த நிலையில், 38 வயதுடைய அவருடைய சகோதரர் முச்சக்கரவண்டி சாரதியாக பணி புரிந்து வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அவர்கள் இருவரும் நேற்றிரவு வயிற்று வலிக்கு சிகிச்சைப் பெற்று நித்திரைக்கு சென்றிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இன்று அவரது உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்ற போது அவர்கள் இருவரும் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து சுகாதார பிரிவிற்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.
பின்னர் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.