சம்பந்தன் சிங்களவர்களுக்காக அரசியல் செய்கிறாரா..!
சிறிலங்காவின் கொதிநிலை அரசியல் தளத்தில் தமிழர் தரப்பு அரசியல் என்பதும் கூட இப்போது சூடுபிடித்திருக்கிறது.
தமிழர் அரசியல் தரப்பின் சமகால நிலவரங்கள் இப்போது சிறிலங்கா அதிபரின் இந்திய விஜயத்தையும் அதன்போது இந்த அரசுக்கு தமிழர்களின் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான வலியுறுத்தல்களையும் மேற்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டிலமைந்த கடிதக்கோரிக்கையை மூன்று பிரிவுகளாக தமிழர் தரப்பு முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழர் தரப்பின் சமகால அரசியல் நிலவரம், நாம் தீர்வினை பெற்றுத்தரக்கோரும் தரப்பையே குழப்பும் நிலையில் அமைந்திருப்பதாக பிரபல அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமாகிய ஜதீந்திரா ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது தெரிவித்திருந்தார்.
யுத்தம் நிறைந்த இந்த 14 ஆண்டுகளாக மேற்குலகை நோக்கியிருந்த தமிழர்களின் எதிர்பார்ப்பு இந்தியாவின் மீது திரும்பியிருக்கும் நிலையில், தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நடைபெறுவதாக இருந்தால் அது இந்தியாவின் தலையீட்டினாலேயே நடைபெற முடியும் எனவும், அதே நேரம் தமிழர் தரப்புகளை ஒன்றிணைத்து பயணிக்கவேண்டிய இடத்தில் இருந்துகொண்டு இருக்கும் இராஜவரோதயம் சம்பந்தன் அந்த விடயத்தில் தவறிழைத்தது போலவே இந்தியாவை அரவணைத்துக்கொள்ளவும் தவறிவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போதைய காலச்சூழலில் சம்பந்தனின் அரசியல் நகர்வுகள் சிங்களவர்கள் கோபித்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முண்ணணி இந்தியாவிடம் கடிதம் மூலமாக கோரியிருக்கும் திம்பு பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வு முயற்சிகளை வலியுறுத்த வேண்டும் என்ற விடயம் காலப்பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைவிடப்பட்ட திம்புப்பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒரு தீர்வைக்கோருவது என்பது இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி ஏற்படும் ஏனென்றால், திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்ததில் அது உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அல்லாத ஒரு விடயத்தை மீண்டும் வலியுறுத்துவது இந்தியாவை குழப்பும் ஒருவிடயமாக சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நன்மை செய்வதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.