யாழில் பல்வேறு இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் சங்கருக்கு கம்பர்மலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தினார்.
திலீபனின் நினைவுத்தூபியிலும் அஞ்சலி
பின்னர் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியிலும், மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்திலும் சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி பொன் சிவகுமாரனின் உரும்பிராயில் உள்ள நினைவுத் தூபிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் மில்லரின் நினைவாக அஞ்சலி
மாவீரர் மில்லரின் நினைவாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக ஈகை சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

எள்ளங்குளம் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கடற்கரையில் கடலில் காவியமான மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 4 மணி நேரம் முன்