கையெறி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அறுவர் கைது!
ரத்மலான கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, கல்கிசை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் என சந்தேகிக்கப்படும் ரூ. 3 லட்சம் மற்றும் 8 கைபேசிகளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரத்மலான ஆர்தர் பகுதியில், கல்கிசை காவல்துறை சிறப்பு மோட்டார் சைக்கிள் படை அதிகாரி ஒருவர் 1,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளார்.

பின்னர், போதைப்பொருள் பெறப்பட்ட இடம் குறித்து விசாரணை செய்தபோது, போதைப்பொருள் விற்கப்பட்ட வீடு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காவல்துறையினரால் இந்த ஆயுதங்களையும் பணத்தையும் மீட்க முடிந்தாக கூறப்படுகிறது.
தடுப்பு காவல் உத்தரவு
அங்கு கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் 29 வயதுடையவர் என்றும் மற்ற சந்தேக நபர்கள் 33, 22, 24, 51 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகிறது.

சந்தேகநபர்கள், ரத்மலான, நாவலப்பிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சந்தேகபர்களை நீதிபதி முன் முற்படுத்தி தடுப்பு காவல் உத்தரவை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |