புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மந்திரவாதி உட்பட ஆறு பேர் கைது !
மன்னார் வங்காலை பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்திரவாதி உட்பட 06 பேரை இன்று மாலை வங்காலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வங்காலை - பஸ்திபுரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு பின் பகுதியில் சிலர் புதையல் தோண்டுவதாக வங்காலை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று மாலை அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களில் கண்டியைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய மந்திரவாதி ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
ஏனைய நான்கு நபர்கள் வாங்காலையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் ஆசிரியர் எனவும் தெரியவருகின்றது.
மேலும் புதையல் தோண்ட பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்கள் மற்றும் மந்திரம் மேற்கொள்ள பயன்படுத்தும் ஒரு தொகுதி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் வங்காலை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
