எதிர்க்கட்சியை அழிக்க சதி - சஜித் பிரேமதாச விசேட அறிக்கை
அரசாங்கத்தின் பலவீனங்கள், இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தற்போது பல்வேறு பொய்களை உருவாக்கி அந்தப் பொய்களை திரும்பத் திரும்பக் கூறி ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விலைபேசும் சதி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக பரவி வரும் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் பதில் அளித்த அவர், “போராட்டத்தின் மூலம் மக்கள் கோரிய வரப்பிரசாதங்கள் சலுகைகள் இல்லாத அரசியல் கட்டமைப்பாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் இந்தக் கோரிக்கைகளை புறக்கணித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை பணத்திற்கு விலைபேசும் சதியில் ஈடுபட்டுள்ளது.
எனவே மக்கள் நிராகரித்த அந்த இலஞ்ச அரசியல் மற்றும் அசிங்க அரசியல் செய்யும் தரப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ கூட்டுச் சேராது.
மக்களால் தீர்மானிக்கப்படும் மக்கள் ஆணையொன்றின் மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொள்வோமே தவிர, குப்பை குவியல்களுடன் இணைந்து கொண்டு செயல்படுவதற்கு எந்தவித தயாரும் இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள்.
இவ்வாறான கலந்துரையாடல்கள் கட்சிக்குள்ளேயோ அல்லது கட்சிக்கு வெளியேயோ இடம்பெறவில்லை.
கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக செயற்படும் நபர்கள் கட்சியின்
ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்படுவர்கள்” - என்றார்.
