தோல் வெண்மை கிரீம்களை பயன்படுத்தினால் பாதிப்பு - எச்சரிக்கும் விசேட வைத்திய நிபுணர்
இலங்கையில் (Srilanka) சருமத்தை வெண்மையாக்கும் கிரிம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (National Hospital colombo) நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்; “சமூகத்தில் பலர் தற்போது சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
தரமற்ற கிரீம்
இதற்கு போதிய விளக்கம் அல்லது அறிவுரைகள் இல்லாததால், மக்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்குப் பதிலாக தரமற்ற கிரீம்களை பயன்படுத்தி, அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
தோலை வெண்மையாக்கும் கிரீம்களில் தரமற்ற இரசாயனப் பொருட்கள், பாதரசம், ஸ்டீரோயிட் போன்ற விஷகரமான பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால், அவை தொடர்ந்து பயன்படுத்தும் நிலையில் நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சார்ந்த நோய்களுக்கான அபாயங்களை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதோடு, 12 மற்றும் 13 வயதினரான மாணவர்களும் இத்தகைய கிரீம்களை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரிய சுகாதார பிரச்சனை
மக்கள் அதிகமாக இணைய தளங்களில் எளிதில் பெறப்படும் இந்த கிரீம்களை வாங்கி, பின்னர் வைத்தியசாலைகளுக்கு வந்தபோது அதைப் பற்றி தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, பெண்களுடன் மட்டுமே இல்லை, இளைஞர்களும் இந்த கிரீம்களை பயன்படுத்தி வரும் நிலையில், இது சமுதாயத்தில் ஒரு பெரிய சுகாதார பிரச்சனையாக மாறி உள்ளது என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
