அரசாங்கத்தின் அசண்டையீனமே இன முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணம் - சாணக்கியன்
சிறிலங்கா அரசாங்கத்தின் அசண்டையீனமே மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதற்கான முழுப் பொறுப்பையும் மகாவலி அபிவிருத்தி அமைச்சரே ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

நாடாளுமன்றத்தில் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரோஷன் ரணசிங்கவிடம் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்திருந்த போது அசண்டையீனம் காரணமாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியதாக சாணக்கியன் தெரிவித்தார்.
குறிப்பாக மயிலத்தமடு - மாதவனை பகுதிகளிலே இன முரண்பாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
சர்வமதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு

இன்று குறித்த பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்ற சர்வமதத் தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை எல்லையில் வழிமறித்த பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு சிறைப்பிடித்துள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலத்தனமடுவில் காணி அபகரிப்பில் ஈடுபடும் நபர்களின் அடாவடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.