இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மேலதிக வரி விதிப்பு : நிதி அமைச்சு அதிரடி
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீத மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30 சதவீத சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50 சதவீத மேலதிக வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50 சதவீத மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சுங்க வரி
எனினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய சுங்க வரி பொருந்தாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மேலதிக வரி குறிப்பாக மோட்டார் வாகனங்களின் ஒரு விரிவான பட்டியலை இலக்காகக் கொண்டுள்ளது என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.
அதன்படி, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்ல வடிவமைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், கார்கள், ஸ்டேஷன் வேகன்கள், பந்தயக் கார்கள் மற்றும் விசேட வாகனங்களான நோயாளர் காவு வண்டிகள், சிறைச்சாலை வான்கள், சவ ஊர்திகள் போன்றன குறிப்பிடப்பட்ட வகைகளில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |