ரணில் போன்றவர் உலகில் எவரும் இல்லை - மார்தட்டும் ஐக்கிய தேசியக் கட்சி
அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய சொத்து, இலங்கையை ஆசியாவில் உயர்ந்த இடத்திற்கு தூக்கி வைப்பதற்காக அந்த தேசிய சொத்தை பிரயோசனப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலை மற்றும் தமது கட்சியின் கொள்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு கிராமம், கிராமாக விநியோகம் செய்த கொள்கை அறிக்கையை மக்கள் அன்று குப்பையில் தூக்கி எறியாமல் இருந்திருந்தால், தற்போது நாடு இப்படி குப்பைக் கூடைக்குள் விழுந்திருக்காது.
அன்று ஐக்கிய தேசியக் கட்சி விநியோகித்த கொள்கை அறிக்கையை மீண்டும் தெளிவான புத்தியுடன் வாசித்து பார்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அன்று மக்கள் தெளிந்த புத்தியுடன் அதனை வாசித்து புரிந்துகொண்ட தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தால், தற்போது ஆசியாவில் உச்சமான இடத்தில் இருந்திருக்கும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பிடக்கூடிய தலைவர் உலகில் எவரும் இல்லை.
நாட்டை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும்
அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அதிபர் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதனால், அதிபர் மீதான நம்பிக்கை தற்போது அதிகரித்து வருகிறது” என்றார்.