போர்க்குணம் மிக்க இளைஞர் குழுக்களால் பேராபத்து!! ரணில் வெளிப்படை
இலங்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
வன்முறைக் குழுவின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கு தடையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்குமாறும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் பேரணியொன்று நடத்தப்பட்டது.
‘கோட்டா - ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளில், கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு முன்பாக பேரணி ஆரம்பமான நிலையில், காவல்துறையினர் அதனைத் தடுத்த நிறுத்து முற்பட்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினரின் வீதித் தடையை அகற்ற முற்பட்டபோது காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைக்கு எடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு ஒரு வன்முறைக் கும்பல் என சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஒரு போர்க்குணமிக்க இந்த இளைஞர் குழு வருடத்திற்கு குறைந்தது 5 தொடக்கம் 6 ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாகவும், அவ்வாறு வன்முறை குணமிக்க இளைஞர் குழுவினரை நோக்கியே நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான வன்முறை கும்பல்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடியின் விளைவாக பொது மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் காரணமாக போராட்டங்கள் இடம்பெற்று வருதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.