கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை - இளைஞருக்கு ஆயுள் தண்டனை
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இந்தக் கொலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனூக்க விக்கிரமசிங்க (07), அஷ்வினி விக்கிரமசிங்க (04), ரினியானா விக்கிரமசிங்க (02), கெலி விக்கிரமசிங்க (02 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணை
கோர சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஒட்டாவாவில்கூட்டுக் கத்திக்குத்து சம்பவத்தில் இலங்கையர்களான நான்கு பிள்ளைகள், அவர்களின் தாய் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை இளைஞர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நேற்று ஒட்டாவா நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இந்த இளைஞர் தம்மீது சுமத்தப்பட்ட 6 குற்றச்சாட்டுக்களில் 4 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
2024 மார்ச் 6 ஆம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றது, தமது நண்பரான தனுஸ்க விக்கிரமசிங்க என்பவரின் வீட்டில், சொய்ஸா தமது கற்றல் செயற்பாடுகளுக்காக தங்கியிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார்.
கொலைக்கான காரணம்
இந்தநிலையில் டி சொய்சா நேற்று ஒட்டாவாவில் உள்ள மேல் நீதிமன்றத்தில முன்னிலையானார்.

தம்மிடம் பணம் இல்லை என்ற காரணத்துக்காகவே இந்த கொலைகளை செய்ததாக முன்னதாக சொய்ஸா வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஒட்டாவாவின் மேயரால் தலைநகரம் இதுவரை கண்டிராத மிகவும் அதிர்ச்சியூட்டும் வன்முறைச் செயல்களில் ஒன்றாக விபரிக்கப்பட்ட இந்தக் கொலைகள், கனடா முழுவதும் தலைப்புச் செய்திகளாக உருவெடுத்தன. மேலும் இலங்கை ஊடகங்களிலும் பேசப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |