கடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு
சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த அழைப்பு விடுக்கப்பட்டது.
வாழ்கைத் தர உயர்வு
தேசிய மீனவர் ஒற்றுமை அமைப்பு, உலகளாவிய மூலோபாய வரைபிற்கான ஆலோசனைக் குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புக்களின் முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையின் அறிமுக நிகழ்வு இன்று(06) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காணொளி ஊடாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“இலங்கையில் சுமார் 200,000 சிறு கடற்றொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாப்பதற்கும் வாழ்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் கடற்றொழில் அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற் பரப்பினுள் நுழைந்து சட்ட விரோத தொழிலான இழுவைமடி வலை தொழிலை மேற்கொளவதால் இலங்கையின் சிறுதொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம்
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தினை சுமூகமாக தீர்ப்பதற்கு இராஜதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கலந்துரையாடல்கள் மூலமாகவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.” - என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)