ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் திருடப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் கீ! வெளிச்சத்திற்கு வந்த மோசடி
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் 'ஸ்மார்ட் கீ' (Smart Key) சாவிகளைத் திருடி விற்பனை செய்த மோசடி சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவிகளைத் திருடிய துறைமுக ஊழியர் ஒருவரும், குறித்த சாவிகளைக் கொள்முதல் செய்த வியாபாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் நேற்று (11) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊழியரைப் பாதுகாப்பு
இந்த 'ஸ்மார்ட் கீ' காணாமல் போனமை தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, துறைமுக ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அதன்படி, குறித்த ஊழியரைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
துறைமுக ஊழியரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட ஸ்மார்ட் கீ சாவிகளைக் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாகன வகைக்கு ஏற்ப 6,000 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 45 'ஸ்மார்ட் கீ' சாவிகளை விற்பனை செய்து, சந்தேக நபரான ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் ஈட்டியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட துறைமுக ஊழியர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரியையும் காவல்துறையினர் கைது செய்ததுடன், அவர் அந்த 'ஸ்மார்ட் கீ' சாவிகளைக் கொள்முதல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன் அவரிடமிருந்த 'ஸ்மார்ட் கீ' சாவிகளையும் காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த மோசடி நடவடிக்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யத் தொடங்கிய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |