சமூக ஊடக முடக்க விவகாரம்! உங்கள் சிறிய தந்தையிடம் இது குறித்து கூறலாமே - நாமலின் டுவீட்டுக்கு திலித் பதிலடி
நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாமல் ராஜபக்ச விபிஎன்னை பயன்படுத்தி தற்போதைய சமூக ஊடகங்களின் முடக்க நிலை குறித்து டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.
நாமலின் குறித்த இப் பதிவுக்கு பதில் தெரிவித்த தொழிலதிபரும் அரச தலைவரின் நண்பருமான திலித் ஜயவீர என்பவர் “ உங்கள் சிறிய தந்தையிடம் இது குறித்து கூறலாமே ” என குறிப்பிட்டார்.
"சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் இப்போது விபிஎன் பயன்படுத்துவதைப் போலவே அனைவராலும் பயன்படுத்த முடியும். இத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார் நாமல்.
இதற்கு பதில் தெரிவித்த திலித் ஜயவீர,
"நீங்கள் தொழில்நுட்ப அமைச்சர் இல்லையா? உங்கள் சிறிய தந்தையிடம் இது குறித்து கூற முடியாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலிட்ட நாமல்,
“நான் ஏற்கனவே எனது கருத்தை தெரிவித்துள்ளேன். எவ்வாறு இருந்தாலும் நீங்களும் எனது சிறிய தந்தையின் சிறந்த நண்பர் தானே நீங்களும் கூறலாமே ” என திலித் ஜயவீரவின் கேள்விக்கு பதிலிட்டார்.
"இதைப் பற்றிய உங்கள் கேள்விக்கு நான் பதிலளிப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன், நாம் ஏன் மக்களை முட்டாளாக்க வேண்டும். நான் உட்பட அனைத்து மக்களும் விரும்புவது ஓர் தீர்வையே" என திலித் நாமலுக்கு பதிலளித்தார்.
இவ்வாறு இருவரும் டுவிட்டரில் தமது கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.