தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்கும்!! ராஜபக்சர்களை எச்சரிக்கும் பௌத்த துறவி
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் நடவடிக்கை அனைத்தும் குப்பைத் தொட்டியில் போடப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகாத்தர் மத்திய நிலைய ஏற்ப்பாட்டாளர் தென்னனே ஜான ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அபிவிருத்தி உத்தியோகத்தர்களது நிரந்தர நியமனம் தொடர்பாக அரச தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொய்யான தகவல்களையே வழங்கி வருகின்றனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான ஒரு தீர்மானத்தை அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அரச தலைவரின் தலைமையில் அடங்கியுள்ளது.
பல மேடைகளில் பட்டதாரிகள் தொடர்பாக பல வேலை திட்டங்களை அவர் முன்வைத்திருந்தார். முன்வைத்த வேலைத்திட்டங்கள் அனைத்துமே இடையில் நிறுத்தப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வீதியில் நிற்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
5 பயிற்சிகளைச் செய்து அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதாக கூறி இருந்தார் அதையும் தற்போது இடைநிறுத்தியுள்ளார்.
ஆகவே நாங்கள் அரச தலைவர் மற்றும் பிரதமருக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
எங்களது நிரந்தர நியமனம் தொடர்பாக தீர்க்கமான முடிவு ஒன்றை வழங்க வேண்டும், வழங்காத பட்சத்தில் நாங்கள் வீதியில் இறங்கிப் போராட நேரிடும்” என அவர் எச்சரித்துள்ளார்.