முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு : இராதாகிருஷ்ணன் உறுதி
முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை (Talawakelle) தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ” எதற்குமே அடித்தளம், ஆரம்பம் சிறப்பாக இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னோக்கி பயணிக்க முடியும்.
முன்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு
அந்தவகையில் முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகள் போற்றுதலுக்குரியது, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இது பற்றி நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்.
கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்“ என இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வானது முன்பள்ளி ஆசிரியர் சம்மேளனம் மற்றும் அதன் நுவரெலியா மாவட்ட கிளை என்பன
இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், பாராட்டு சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.
மகஜர் கையளிப்பு
அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணனிடம் கையளிக்கப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர் தொழிலில் உள்ள பாதுகாப்பு இன்மை, தொழிலுக்குரிய அங்கீகாரம் இன்மை, சம்பளப் பிரச்சினை உட்பட பல விடயங்கள் குறித்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மகஜரை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், முன்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
