கொரிய குடியரசு இலங்கைக்கு வழங்கிய உறுதிமொழி
இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடு தொடர்பாக கொரிய குடியரசிற்கும் இலங்கைக்குமிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா தொற்றுநோய் நிலைமைகளின் போது இலங்கை மக்களைப் பாதுகாப்பதில் கொரிய குடியரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் உறுதியளித்துள்ளார்.
கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு முதற்தடவையாக வருகை தந்த கொரிய குடியரசின் தூதுவரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.
மரியாதை பூர்வமான வரவேற்பை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் தென் கொரிய தூதுவருடன் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இரு நாடுகளிலும் உள்ள கொவிட் -19 நிலவரங்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தென் கொரிய தூதுவர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டில் காணப்படும் தொற்றுநோய் நிலைமைகளின் போது இலங்கை மக்களைப் பாதுகாப்பதில் கொரிய குடியரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என கொரிய தூதுவர் உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் உறவுகளை மேலும் பலப்படுத்துவதே பாதுகாப்புச் செயலாளருடனான இந்த சந்திப்பின் மூலம் எதிர்ப்பார்ப்பதாக தென் கொரிய தூதவர் தெரிவித்த அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.