கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதில் 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கான டோக்கன் விநியோகம் மு.ப. 6.30 முதல் பி.ப. 2.00 மணி வரை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய தினத்திற்கு ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே திகதியை ஒதுக்கிக்கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் மற்றும் அவசர அல்லது முன்னுரிமை தேவையுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட காலப்பிரிவிற்குள் தமது விண்ணப்பங்களை ஒருநாள் சேவையின் கீழ் ஒப்படைக்க முடியும்.
கடவுச்சீட்டுக்கான பணம்
அக்காலப் பகுதியில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதால் முன்னைய நாள் இரவிலிருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்னால் வரிசைகளில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. உரிய நாளில் மு.ப. 6.00 மணிக்குப் பின்னர் வருகைத்தந்து தடையின்றி தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மேலும் தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பத்தை ஒப்படைப்பதை துரிதப்படுத்துவதற்கு அல்லது விரைவாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு தரகருக்கும் அல்லது வேறு எவருக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள வளாகத்திற்குள் அல்லது வெளியே பணம் கொடுக்க வேண்டாமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கடவுச்சீட்டுக்காக செலுத்தவேண்டிய கட்டணத்தை சிறாப்பர் கருமபீடத்தில் மாத்திரம் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் கருமபீடத்தில் மாத்திரம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
