தமிழர்கள் சார்பில் ஐ.நா உயர் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சு
இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐ.நா உயர் அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்று இணையவழியில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஐ .நா மனித உரிமை ஆணையத்தின் ஜெனிவா அலுவலக உயர் அதிகாரிகள், ஐந்து தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.
ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு 25 பெப்ரவரி 2022 திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பின்னர் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலக உயரதிகாரிகள் தமிழ்தேசிய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு அதன் மீதான ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் வேளையிலே நடந்த இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இலங்கை சார்பில் வெளிநாட்டமைச்சர் ஜி. எல் பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐ.நாவுக்கு நேரடியாக பயணம் செய்திருந்த வேளையில் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐ.நா உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவே ஆகும்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,உடல்நிலை காரணமாக ஸ்ரீகாந்தா கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு கலந்துரையாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது
. இதன்போது யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதிப் பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாதத் தடைச் சட்டம், அரசியல் கைதிகள், மற்றும் அரசுக்கு தேவையானவர்களுடைய விடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக செயற்பாடுகள், மற்றும் புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ் கட்சி பிரதிநிதிகளால் ஐ.நா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தனது தரப்பில் பலரை ஐ.நா அமர்வுக்கு அனுப்பி வைத்திருக்கும் இவ்வேளையில் தமிழர் தரப்பு பிரதிகளை ஐ.நா அலுவலர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமான நடைபெற்றது தமிழர் தரப்பின் மிகவும் முக்கியமான நகர்வாக கருதப்படுகின்றது.
மேலும் கடந்த செப்டெம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ஐந்து கட்சிகளினால் கையொப்பம் இடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இம்முறை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டு இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கலந்துரையாடலிலும், குறித்த கடித்தில் கையொப்பம் இடுவதிலும் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி விலகியிருந்துள்ளது.
13ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியாவிற்கு கடிதம் எழுதிய போது இலங்கை தமிழரசு கட்சி அதில் கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
