போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி
வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லநந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, “போக்குவரத்துத் துறையில் செயல்திறனை உருவாக்க பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். இதேவேளை, கடவத்தை பேருந்து நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
கடவத்தை பேருந்து நிலையம்
இந்தப் பேருந்து நிலையங்களில் நவீன போக்குவரத்து முகாமைத்துவ முறைகளும், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2023 இல் 2214 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

அந்த வீதி விபத்துகளில் 2321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டும் கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை 1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
வீதிப் பாதுகாப்பு
அந்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவை இலங்கை காவல்துறையினருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
மேலும், பாடசாலை மட்டத்தில் வீதிப் பாதுகாப்பு கழகங்களை (Road Safety Club) நிறுவுவதற்கு தேவையான கையேடுகளை ஆசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இணைச்செயற்பாடாக பாடசாலைக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இணையாக பதக்கம் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொடருந்து பணிப்பகஷ்கரிப்பு தொடர்பான தீர்வுகளை வழங்குவதில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 05 வருடங்களுக்கு ஒருமுறை நிலைய அதிபர்களின் பதவி உயர்வுக்கு தேவையான அனுமதியை அரச சேவை ஆணைக்குழு ஏற்கனவே வழங்கியுள்ளது.
அதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆனால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகஷ்கரிப்பு வெறும் அரசியல் நோக்கத்திற்காகவே என்பது தற்போதுது மக்களுக்கு தெளிவாகியுள்ளது.
வேலைநிறுத்தங்கள் உண்மையான தொழிசங்க உரிமைகளுக்காக நடத்தப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |