கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை
கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் நபரொருவர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், அவரிடம் விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரையே அவர் தகாத முறைக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை நிர்வாகம்
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பத்து தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்திய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு காவல்துறையினருக்கு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதன்பின், இன்றைய தினம் (11) கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் சிறுவர்களை மாலை நான்கு மணிவரை அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளதோடு அவர்களை காவல்துறை வாகனத்தில் காவல் நிலையம் ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளதோடு காவல்துறையினரோடு முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள்
இந்நிலையில், தங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எனவே அவர்களின் உளவியலை புரிந்து கொண்டு காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாம் காவல்துறையினர் அழைத்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து காவல்துறையினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் வகையில் பெற்றோரை இந்த பிரச்சினையில் தாமாக விலகிக்கொள்ளும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்றும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சி காவல் நிலைய பொறுப்பதிகாரியுடன் இன்று (12) தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி காவல்நிலைய நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுவர்களை தகாதமுறைக்கு உட்படுத்தியமை மிகப்பெரிய சமூக அனர்த்தம் ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
