எனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி..! தமிழ் தலைமைகளுக்கு டக்ளஸ் விடுத்த அறைகூவல்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினையும் அதற்கு பின்னர் கிடைத்த சந்தர்ப்பங்களையும் தமிழ் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள தவறியமையினால் எமது மக்கள் பேரவலங்களை எதிர்கொண்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது கிடைத்துள்ள வாய்ப்பினை தமிழ் தலைமைகள் காத்திரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று ஆற்றிய கொள்கை பிரகடன உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்க முயற்சிக்கப்படுகின்ற சர்வகட்சி அரசாங்கத்தினை தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான ஆரோக்கியமான தளமாக அனைத்து தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும்.
அதிபரின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் அதிபருக்கு வழங்க வேண்டும்.
அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி
தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் அதிபரின் சிம்மாசன உரையில் பிரதிபலித்திருக்கின்றமையை வரவேற்கிறோம், குறித்த விடயங்கள் படிப்படியாக முன்னுரைிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்.
ஈ.பி.டி.பி. கட்சியினால் அண்மையில் அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டிருந்த, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வு மற்றும் காணிப் பிரச்சினைகள், யுத்தப் பாதிப்புகளை நிவர்த்தி செய்தல் உட்பட்ட விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதிபரினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை எமது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் அரசியல் அணுகுமுறைகளுக்குமான வெற்றியாகவே கருதுகின்றோம். இவ்வாறான சூழல்களை ஏனைய தமிழ் தரப்புக்களும் எமது மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான சந்தர்ப்பங்களாக பயன்படுத்த வேண்டும்.
தமிழர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட கருத்து
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வடக்கில் கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கொள்கை பிரகடன உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - வடக்கு கிழக்கில் அபிவிருத்தி..! கொள்கை பிரகடன உரையில் ரணில் |
