தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - வடக்கு கிழக்கில் அபிவிருத்தி..! கொள்கை பிரகடன உரையில் ரணில்
புதிய இணைப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன, வடக்கில் கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் ஆற்றிவரும் கொள்கை உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " எமது பொருளாதாரம் ஏன் விழுந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். காலத்துக்கு காலம் நபருக்கு நபர் ஏற்றல் போல் பொருளாதார கொள்கைகளை மாற்றுவது நல்லதா என்பதை பார்க்க வேண்டும். நிலையான பொருளாதாரம் 2026இற்குள் நிறுவப்பட வேண்டும்.
நீண்ட கால திட்டங்கள் என்னால் கையாளப்பட்டு வருகின்றன. நான் மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்காக உழைக்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து இந்த நிலையை மாற்ற வேண்டும். அணைத்து நாடுகளுடனும் இணைந்து நாம் வேலை செய்வோம்.
அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஏமாந்து போய் இருக்கிறர்கள். இதனால் தான் அவர்கள் ஆட்சி மாற்றத்தை கேட்டார்கள். அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வருவேன்.
அஹிம்சை வழியில் இடம்பெற்று வந்த போராட்டங்கள் மெதுவாக திசை மாறின. அஹிம்சை வழியில் போராடுபவர்களை நான் ஒரு போதும் தொடமாட்டேன். அவ்வாறு போராடுபவர்கள் மீது ஏதேனும் நடந்தால் அவர்கள் உடனே அது தொடர்பாக புகார் கொடுக்கலாம். எரிபொருள் வரிசையில் குழப்பங்களை ஏற்படுத்தும் பாதாளக்குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அநாவசியமாக தேவையற்ற இடங்களில் கூடுவதை தடுக்கவும். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கூடுங்கள். அமைதியாக போராடும் போராட்டத்தில் குழப்பங்களை ஏற்றப்படுத்த வேண்டாம்.
இன, மத பேதமின்றி நாம் செயல்பட வேண்டும். 1974ஆம் ஆண்டு அரசியலுக்கு நான் வந்ததில் இருந்து இதனை இல்லாதொழிக்கவே ஆசைபட்டன். ஒரே தாயின் பிள்ளைகளாக அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே எனது ஆசையாகும்.
என்னுடைய கொள்கைகளில் இருந்து நான் ஒரு போதும் விலக மாட்டேன். இளைஞர்களின் ஆதரவோடு நாம் இணைந்து செயல்படுவோம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும். இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
இலஞ்சத்தை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட புதிய சட்டங்கள் போடப்படும். என்னுடைய பதவி காலத்திற்குள் இது போன்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் நான் கொண்டு வருவேன் எனக் குறிப்பிட்டார்.
இரண்டாம் இணைப்பு
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கை உரையிலேயே நிகழ்த்தும் போது இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி.
நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தலும் நாம் அனைவரும் இலங்கையர்களே, அதேபோல நானும் எவ்வாறு அதிபராக தெரிவு செய்யப்பட்டாலும் நானும் இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன். நாடு இதுவரை முகம் கொடுக்காத ஓர் பிரச்சினையை இப்போது முகம் கொடுக்கிறது.
இந்த நிலையை மாற்ற இன்று நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு. பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும்.
அத்துடன், அனைவரையும் இணைந்து செயல்பட அழைக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக நான் கலந்துரையாடல்களை தொடங்கி இருக்கிறேன்.
சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியாக செயல்படுவது அல்ல. அனைவரும் இணைந்து செயல்படுகின்ற ஒரு அரசாங்கம் ஆகும். இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்
இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நாம் செய்ய இருக்கும் காரியங்களை இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் அறிவிப்போம்.
IMF உதவிகளை பெற்று இம்மாதம் முடிவதற்கு முதல் உதவிகளை பெற்றுகொள்வோம். இலங்கையின் வரலாற்றின் படி மீண்டும் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியாளராக நாம் மாறுவோம். பொருளாதார பிரச்சினைகளினால் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன.
ரூபாவின் பெறுமதியும் விழுந்துள்ளது. இதேவேளை சுற்றுலாப்பயணிகள் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருவார்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்", எனக் குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று வைபவ ரீதியாக ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் வருகையும், அதனைத் தொடர்ந்தும் பிரதமர் தினேஸ் குணவர்தனின் பிரச்சன்னமும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்தும், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெற்றது.
அதிபரின் வருகையின் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், அதிபருக்கு முப்படையினரின் கௌரவம் அளிக்கப்பட்டது. பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அழைத்து செல்லப்பட்டதுடன், கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவிகளால் ஜயமங்கல கீதம் இசைக்கப்பட்டு ஆசி வேண்டப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற அங்கி அறைக்கு அதிபர் அழைத்துசெல்லப்பட்டார். இந்நிலையில், காலை 10.25 க்கு ஒலிக்க ஆரம்பிக்கும் கோர மணி 5 நிமிடங்கள் ஒலிக்கும். பின்னர் சபாநாயகர் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சபா மண்டபத்துக்குள் பிரவேசிப்பர்.
அதனை தொடர்ந்து அதிபர் அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்துவார்.
