யாழ். பலாலி கிழக்கு காணியை விடுவிப்பு - இளங்குமரன் எம்.பி வெளியிட்ட தகவல்
பலாலி கிழக்கு பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் சாதகமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.
விசேட கலந்துரையாடல்
யாழ் . மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும் இடையில் பலாலி இராணுவ தலைமையகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன் போது, கடந்த 36 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஒரு பகுதி காணியை விடுவிக்க இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான கலந்துரையாடல்
அதில் குறிப்பாக பலாலி வீதிக்கு கிழக்கு புறமாக காணப்படும் பலாலி கிழக்கு பகுதி மற்றும் பருத்தித்துறை - கீரிமலை வீதியில் கடற்கரை பக்கமாக இருக்கும் பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், இராணுவ தரப்பினர் சாதகமான பதில்களை தந்தமையால், மிக விரைவில் அவற்றை விடுவிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பலாலி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி, பொதுமக்கள் தொடர்பாடலுக்கான இராணுவ அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டு, குறித்த விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |