இருண்டது நாடு வறண்டது வயிறு- மாபெரும் போராட்டம் கிழக்கில்!
நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் பேரணி ஒன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சந்தியில் இருந்து ஆரம்பித்து அட்டாளைச்சேனை நகரப்பகுதி வரை ஊர்வலமாக சென்றது.
சுமார் பல்லாயிரக்கணக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு சுலோகங்களை தாங்கி சென்றதை காண முடிந்தது.
மேலும் இப்போராட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் பிரதான பேச்சாளாராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் விசேட பேச்சாளராக கலந்து கொண்டார். இந்த பேரணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் உள்ளிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.