வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாக இலங்கை
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் எதிர்கால அரசாங்கங்களை ஆபத்தில் தள்ளுவதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
அரசாங்கத்திடம் வெளிநாட்டு கையிருப்பு எதுவும் இல்லை. 2019 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்தபோது, எங்களிடம் 8 பில்லியன் அமெரிக்க டொ லர்கள் வெளிநாட்டு கையிருப்பு இருந்தது. இப்போது, அவர்கள் அதை ஒரு பில்லியனுக்கும் குறைவாகக் குறைத்துள்ளனர்.
நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது . துறைமுக நகரம் , யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கும், திருகோணமலை எண்ணெய் குத தொகுதியை இந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வல்லரசு நாடுகளுக்கும், பிராந்திய வல்லரசுகளுக்கும், நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும் விளையாட்டு மைதானமாக இலங்கை மாறிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
