மல்வானை சொத்துக் குவிப்பு விவகாரம் - பசில் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபகச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மல்வானையில் காணி ஒன்றை கொள்வனவு செய்து சொகுசு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சஷவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
உயர் நீதிமன்றில் விசாரணை
பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரியின் கணவர் டி.நடேசனுக்கு எதிராக கம்பஹா உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர், மூன்று தனித்தனி குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தது. இந்த வழக்கு அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அன்றைய தினம் நாட்டில் நிலவும் மோசமான நிலைமைகள் காரணமாக உயர்நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலையாகப் போவதில்லை என பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதி சொகுசு வீடு
தொம்பே, மல்வான, மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பெரிய வீடு, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை ஒன்றை நிர்மாணித்து, அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன் போது அரசு நிதி 1 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நிதி குற்றவியல் விசாரணை
இந்நிலையில், கட்டிடக் கலைஞர் முதித ஜெயக்கொடியிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திய போது, காணி மற்றும் மாளிகையை கொள்வனவு செய்ய பயன்படுத்திய பணம் தனக்கு சொந்தமானது அல்ல எனவும், பணத்தின் உரிமையாளர் தமக்கு பணிப்புரை வழங்கியதன் அடிப்படையில் தான் செயற்பட்டதாகவும் சாட்சி கூறியிருந்தார்.
மேலும் அந்த பணம் தான் சம்பாதித்ததோ அல்லது தனத நிறுவனத்திற்கோ சொந்தமானது அல்ல எனவும் வேறு ஒருவருக்கே சொந்தமானது எனவும் தெரிவித்திருந்தார்.
அவரின் கோரிக்கைக்கு அமைய 111/3, மஹவத்தை, கங்கபாத வீதி, மபிடிகம, மல்வானையில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக நான் காணியொன்றை கொள்வனவு செய்தேன் என முதித ஜயக்கொடி உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து ஏலம் விட உத்தரவு
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு அரச தலைவர் சட்டத்தரணி, மல்வானை சொத்து பசிலுக்குச் சொந்தமான சொத்து இல்லை என வாதிட்டதையடுத்து, 2016 ஆம் ஆண்டு கம்பஹா உயர்நீதிமன்றத்தால் வீட்டை ஏலம் விடுவதற்கு உத்தரவிடப்பட்டது.
அத்துடன் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான இந்த வீடுகளுக்கு உரிய சட்ட ஆவணங்கள் இல்லாதமையால் பறிமுதல் செய்ய 2016 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் தீர்மானித்தது.
பண்டோரா ஆவணம்
இதேவேளை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு நடத்திய பண்டோரா ஆவண விசாரணையால் டி.நடேசனின் பெயர் வெளிவந்தது. அதன் போது நிருபமா ராஜபக்சவின் கணவர் டி.நடேசன் சிட்னி மற்றும் லண்டனில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியமை அம்பலமானதும் குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து நடேசன் மீதும் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளையடுத்து இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்று அறிவித்துள்ளது.