ராஜபக்சக்களால் பழிவாங்கப்பட்டேன் - எனினும் போராட்டம் தொடரும்; தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் சூளுரை!
அரசியல் ஊழல் நிலச்சுரண்டல், பணச்சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்த என்னை ராஜபக்ச அரசாங்கம், தங்களின் அதிகாரத்தைக் கொண்டு தன்னை மிகவும் பயங்கரமாக பழிவாங்கியுள்ளது என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன், கடந்த 2021 ஆம் ஆண்டு, தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை இணையத்தளங்களில் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
15 மாதங்கள் சிறைத்தண்டனை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 15 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் நேற்றைய தினம் இரவு பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரியவருகையில்,
“என்னிலை வந்தாலும் எங்கள் தமிழர் உணர்வாளர் அமைப்பு தன்னிலைமாறாது அடக்கு முறைக்கு எதிரான தார்மீக போராட்டம் நிச்சயமாக தொடரும், ஏன் என்றால் 15 மாதங்கள் சிறையிலே நாங்கள் வாழப்பழகிக் கொண்டோம்.
ஆகவே சிறைச்சாலை அடக்குமறை தொடர்பில் நாங்கள் எள்ளவு கூட கவலை கொள்ளப் போவதில்லை. தமிழர் அடக்குமுறைக்கு எதிராக தமிர் உணர்வாளர் அமைப்பு தொடர்ந்து செயற்படும்.
ராஜபக்ச அரசாங்கம் தங்களுடைய எதிரிகளை அடக்குவதற்காகவும் தங்களுக்கு எதிரானவர்களை சிறையில் அடைப்பதற்காகவும் அந்த சட்டத்தை கையாண்டு கொண்டிருந்தனர்.
இதுவரையும் அது தான் நடந்து கொண்டிருந்தது. எனவே தற்போது எந்த சிங்கள அரசியல் தலைவர்கள் வந்தாலும் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காது அது தான் உண்மையான விடயம்” எனவும் தெரிவித்துள்ளார்.
சரீர பிணை மற்றும் ரொக்க பிணையில் விடுதலை
தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை இணையத்தளங்களில் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி ஏறாவூர் காவல் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, சட்டத்தரணிகளான ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர் நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்னிலையாகி, முன்நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.
அதனையடுத்து சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் முன்னிலையி்ல, வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையில், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத், ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணையிலும், 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் விடுவித்துள்ளார்.