போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் கடன் கேட்கும் இலங்கை
இலங்கை ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர்களை கைமாற்று கடன் வசதியாக கோரியுள்ளது. கச்சாய் எண்ணெய் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக இலங்கை, ரஷ்யாவிடம் இந்த நிதியுதவியை கோரியுள்ளது.
இலங்கையிடம் இருந்து தேயிலை கொள்வனவு செய்யும் பிரதான நாடான ரஷ்யா தற்போது உக்ரைன் நாட்டுடன் போரில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம், அந்நாட்டிடம் கடனை கோரியுள்ளது.
போர் ஏற்படுவதற்கு முன்னர் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்தது.
இதனிடையே ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை பிரதியமைச்சர் தலைமையிலான குழுவினர் இந்த வாரம் இலங்கை வந்திருந்ததுடன் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இலங்கை தற்போது மிகப் பெரிய அந்நிய செலவாணி தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகிறது.இதன் காரணமாக இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் இருந்து அந்நிய செலாவணியை கைமாற்று கடன் உதவியாக கோரியிருந்தது.