இலஞ்ச ஊழல் பிடியில் 2025 இல் சிக்கிய முக்கிய புள்ளிகள்...! வெளியான தகவல்
கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 130 சுற்றிவளைப்புகளில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
ஏனைய விசாரணைகள்
இந்தக் கைதுகளில் அதிகப்படியானோர் இலங்கை காவல் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் எண்ணிக்கை 30 என குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட காவல் உத்தியோகத்தர்களில் 13 காவல் சார்ஜன்ட்கள், ஒன்பது காவல் கான்ஸ்டபிள்கள், நான்கு உப காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் இரண்டு தலைமை காவல்துறை பரிசோதகர்கள் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காவல்துறையினரை தவிர நீதி அமைச்சுடன் தொடர்புடைய 11 பேர், விவசாய சேவைகள் திணைக்களத்தின் ஐந்து அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபைகளின் மூன்று அதிகாரிகள் ஆகியோரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்புகள் மூலம் இடம்பெற்ற கைதுகளைத் தவிர முன்னெடுக்கப்பட்ட ஏனைய விசாரணைகள் ஊடாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடுகள்
இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்தியர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளடங்குவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, 2025 ஆம் ஆண்டில் 153 பேருக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 69 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் ஆணைக்குழுவிற்கு 8,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் அவற்றில் 569 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அரசாங்க சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |