தொடர் குடியிருப்பில் பற்றிய தீ- எரிந்து நாசமாகிய ஆவணங்கள்!
டயகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
14 வீடுகள் கொண்ட தொடர் லயன்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து ஏனைய வீடுகளுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த 5 பேர் தீக் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக டயகம காவல் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.







