காலி முகத்திடல் வன்முறை- சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு!
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு அழைப்பாணை அனுப்ப தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் சட்டத்தை நிலைநாட்ட தவறியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக காவல்துறைமா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் ஆற்றிய பங்கு குறித்து காவல்துறைமா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி விளக்கமளித்தனர்.
அதன் அடிப்படையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் மோதல் சூழ்நிலையில் சட்டத்தை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைக்கவில்லை எனவும் புலனாய்வு குறைபாடுகள் காணப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.