சிறிலங்காவில் மிக மோசமான நிலையில் இருக்கும் அரச நிறுவனங்கள்- வெளிப்படுத்திய தெரிவுக்குழு!
அரச நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அதிகளவான நஷ்டத்தில் இயங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி இலங்கை மின்சார சபை மற்றும் சதோச ஆகிய நிறுவனங்களும் மிக மோசமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் மிக மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும் அடங்குகின்றது. அதனடிப்படையில் அந்த நிறுவனம் அடைந்துள்ள நஷ்டம் 37 ஆயிரம் கோடியே 7 ஆயிரத்து 200 ரூபாய் என தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அரச நிறுவனங்களில் நடந்ததாக கூறப்படும் ஊழல், முறைகேடுகள் மற்றும் செயற்பாட்டுத்துறையில் நிலவிய குறைப்பாடுகளே பெரும்பாலான அரச நிறுவனங்கள் நஷ்டமடைய காரணம் என தெரியவந்துள்ளதாக தெரிவுக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளும் ஓரளவுக்கு இந்த நிறுவனங்கள் நஷ்டமடைய பிரதான காரணமாக அமைந்துள்ளன எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு வருவதற்காக கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் விசேட ஆலோசனையின் பேரில் சிறப்பு வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.