சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றத்திற்காக விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளைய தினம் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 27 ஆம் திதி, இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுப்பதை நீதிமன்றம் இன்றைய தினம் வரை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. சிறையில் வைக்கப்பட்டுள்ள சஷி வீரவன்சவை சிறைச்சாலை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கடூழிய சிறைத்தண்டனை
ஏற்கனவே இந்த வழக்கில் சஷி வீரவன்ச குற்றவாளி என முடிவு செய்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், கடந்த 27 ஆம் திகதி இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அதனை செலுத்த தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இலக்கம் 233 கீழ் 16 ரத்தநாயக்க மாவத்தை, தெற்கு தலங்கம, பத்தரமுல்லை என்ற முகவரியில் வசிக்கும் சமிந்த பெரேரா என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது குறித்து விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை திணைக்களம், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய வழக்கை தாக்கல் செய்திருந்தது.