இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை
இலங்கை சுங்கத் திணைக்களம் தனது மாதாந்த வருமான இலக்கை தொடர்ந்து ஆறாவது மாதமாகவும் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஜூன் மாதம் முடிவடைவதற்கு முன்பே, குறித்த மாதத்திற்கான வருமான இலக்கை சுங்கத் திணைக்களம் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், 194.1 பில்லியன் ரூபாய் வருமானத்தை திணைக்களம் ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியில் சரிவு
2026 ஆம் ஆண்டிற்காக இலங்கை சுங்கத் திணைக்களம் 2,207 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை நிர்ணயித்துள்ளது.
வாகன இறக்குமதியில் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, இந்த இலக்கு கடந்த ஆண்டை விட 13.5 சதவீதம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் முடிவதற்கு முன்பே, இந்த ஆண்டுக்கான மொத்த இலக்கில் 60.8 சதவீதத்தை திணைக்களம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சட்ட நடைமுறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு நடைமுறைகள், பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இறக்குமதி அளவுகளில் ஏற்பட்டுள்ள மீட்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு நிலைப்படுத்தப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை, பொருட்களில் விலையைக் குறைத்து காட்டுதல், மற்றும் தவறான பிரகடனங்கள் மீதான கடுமையான கண்காணிப்பு ஆகியவையே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில், இலங்கை சுங்கத் திணைக்களம் 2,551 பில்லியன் ரூபாய் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வருமானத்தை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
YOU MAY LIKE THIS
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்