சர்வதேச அளவிலான போதைப்பொருள் வியாபாரம் - இலங்கை ஆசாமி சிக்கியது எப்படி!
சர்வதேச ரீதியில் போதைப்பொருள் விநியோகம் செய்வதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் சர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் கைது தொடர்பில் மடகஸ்கார் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நீதிமன்றங்களால் விடுக்கப்பட்டிருந்த பிடியாணைகள் மற்றும் காவல்துறை அறிக்கைகளின்படி, தேடப்பட்டு வந்த ஹரக் கட்டா என்பவர் உள்ளிட்ட பாதாள உலக உறுப்பினர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சர்வதேச பிடியாணை
அதனடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரதமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன உள்ளிட்ட 8 பேர் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடகஸ்காரின் முன்னணி ஊடக வலையமைப்பான L’EXPRESS இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த 8 பேரும் மடகஸ்காரில் உள்ள இவாட்டோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரி குழு கைது
அவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி என்று கூறப்படும் மலகாசியரான பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் அறிக்கையின்படி, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஹரக் கட்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏனைய ஐந்து பேர் கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி நாட்டின் Nosy Be சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் வந்துள்ளனர் என்றும் அவர்கள் கடந்த மார்ச் முதலாம் திகதி மடகஸ்காரை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட போது, ஹரக் கட்டா தன்னையொரு கோடீஸ்வர தொழிலதிபர் போல் காட்டிக் கொண்டதாகவும், குடு சலிந்து உட்பட ஏனைய குழுவினர் ஹரக் கட்டாவின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பின்படி, ஹரக் கட்டா மட்டும் மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் குடு சலிந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவாடோ விமான நிலையத்தில் கைது
ஹரக் கட்டா மற்றும் பலர் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து இரண்டு சொகுசு மகிழுந்துகளில் இவாடோ விமான நிலையத்திற்கு சென்றதாகவும் மடகஸ்கார் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது, ஹரக் கட்டாவின் மனைவியென கூறப்படும் பெண்ணிடமிருந்து அந்நாட்டின் நாணய பெறுமதியிலான 38 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் டுபாய், மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலைதீவு மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளில் போதைப்பொருள் விநியோகம் செய்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், ஹரக் கட்டா உள்ளிட்டோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த போதைப்பொருள் வலையமைப்பில் மேலும் சிலரும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் உத்தியோகபூர்வ ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வலையமைப்பு
அதேவேளை இந்த கைது தொடர்பில் சிறிலங்கா குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சர்வதேச காவல்துறை பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக தகவல் கிடைக்கவில்லையெனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உண்மைகளை உறுதிப்படுத்தியதன் பின்னர் அந்த நாட்டுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தி சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறிலங்கா காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று அந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படலாம் என்றும், அவர்களை அழைத்துவரலாம் என்றும் சிறிலங்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு முன், சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பின்படி டுபாய் காவல்துறையால் ஹரக் கட்டா கைது செய்யப்பட்டார். அப்போதும் குடு சலிந்து உடன் இருந்ததுடன் அவர்களிடம் போலி கடவுச்சீட்டும் இருந்துள்ளது.
அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்களை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால், கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி டுபாய் காவல்துறையினரால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
