மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - எச்சரிக்கை விடுத்த தேரர்!
நாட்டில் பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை நடத்துங்கள் எனவும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்
மேலும் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்ட போது அந்நாட்டு அரசியல்வாதிகள் அரசியல் கட்சி பேதங்களை துறந்து பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட்டு, நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்கள்.
இதேவேளை தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்ட போது அந்நாட்டு மக்கள் தமது சொத்துக்களையும், தங்கத்தையும் அரசாங்கத்திற்கு வழங்கி பொருளாதார நெருக்கடியினை வெற்றிகொண்டார்கள்.
அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளில் மட்டுமே அவதானம்
அந்த நாட்டு அரசாங்கங்கள் அந்நாட்டு மக்களை ஒருபோதும் நெருக்கடிக்குள்ளாக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் இங்கு யார் அதிபர், யார் பிரதமர், யாருக்கு எந்த அமைச்சு என்பதற்கு மாத்திரம் அவதானம் செலுத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

