பாரிய ஊழல் குற்றச்சாட்டு! சிக்கலுக்குள்ளாகியுள்ள மனுஷ உள்ளிட்ட அதிகாரிகள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (Sri Lanka Bureau of Foreign Employment) பணியாற்றிய உயர் அதிகாரிகள் குழு விரைவில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று (16) கொழும்பு (Colombo) தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த காலத்தில் பணியாற்றியவர்களே இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.
பணியக அதிகாரிகள்
இந்தநிலையில், மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவுக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கான வெளியூர் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து 4.3 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளரை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்தக் கோரிக்கையை சந்தேக நபரின் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர் நளிந்திர இந்திரதிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி பிரதீப் கமகே உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு கடுமையாக எதிர்த்துள்ளனர்.
அத்தோடு, தனது கட்சிக்காரர் இதற்கு முன்பு இதேபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கூடுதல் பிணை
இதனடிப்படையில், சந்தேக நபருக்கு எதிரான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரிக்குமாறும் மற்றும் நியாயமற்ற செயல்முறைக்கு இடமளிக்காமல் நீதிமன்றத்தை நாடுமாறும் சட்டத்தரணி நளிந்திர இந்திரதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயங்களை பரிசீலித்த தலைமை நீதவான், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபரை ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு கூடுதல் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் கோரியதாகக் தெரிவிக்கப்படும் ரூபாய் ஒரு மில்லியன் தொகையை ஆதாரமாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
