3 மாதங்களில் 5 முறை விலை உயர்வு! நாட்டில் உச்சக்கட்ட விலையை எட்டியது எரிபொருள்
இலங்கையில் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அனைத்து பிரதான எரிபொருட்களின் விலைகளும் லிட்டருக்கு 103 ரூபாய் முதல் 155 ரூபாய் வரை பாரியளவில் அதிகரித்துள்ளன.
நேற்று நள்ளிரவு (மே 31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய விலை திருத்தத்துடன் இந்த ஆண்டின் மிக உயர்ந்த எரிபொருள் விலை உச்சத்தை நாடு எட்டியுள்ளது.
மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில் ஒக்டேன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 155 ரூபாயாலும் ஒக்டேன் 92 பெட்ரோல் 141 ரூபாயாலும் லங்கா ஒட்டோ டீசல் 126 ரூபாயாலும் லங்கா சுப்பர் டீசல் 149 ரூபாயாலும் மற்றும் மண்ணெண்ணெய் 103 ரூபாயாலும் ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக அதிகரிப்பு
🛑 முதலாவது திருத்தம்
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய கிழக்கில் வெடித்த மோதல் சூழலைத் தொடர்ந்து மார்ச் முதலாம் திகதியன்று முதல் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு ரூபாயால் (ரூபாய் 292 இலிருந்து 293 ஆக) உயர்ந்தது. ஒட்டோ டீசல் நான்கு ரூபாயாலும் (ரூபாய் 281), சுப்பர் டீசல் ஆறு ரூபாயாலும் (ரூபாய் 329) அதிகரித்தன.
ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

🛑 இரண்டாவது திருத்தம்
இதையடுத்து இரண்டாவது திருத்தத்தின் அடிப்படையில் ஒக்டேன் 95 பெட்ரோல் 25 ரூபாயால் உயர்ந்து 365 ரூபாயாகவும், ஒக்டேன் 92 பெட்ரோல் 24 ரூபாயால் உயர்ந்து 317 ரூபாயாகவும் மாறின.
இதேவேளை ஆட்டோ டீசல் 303 ரூபாயாகவும், சுப்பர் டீசல் 353 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபாய் அதிகரித்து 195 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டன.
உலகளாவிய எரிபொருள்
🛑 மூன்றாவது திருத்தம்
உலகளாவிய எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக மார்ச் 22 அன்று வரலாற்றின் மிகப்பெரிய ஒற்றை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
- ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரே நாளில் 90 ரூபாய் அதிகரித்து 455 ரூபாயாக உயர்ந்தது.
- ஒக்டேன் 92 பெட்ரோல் 81 ரூபாய் அதிகரித்து 398 ரூபாயாக உயர்ந்தது.
- ஒட்டோ டீசல் 79 ரூபாய் அதிகரித்து 382 ரூபாயாக உயர்ந்தது.
- சுப்பர் டீசல் 90 ரூபாய் அதிகரித்து 443 ரூபாயாக உயர்ந்தது.
- மண்ணெண்ணெய் 60 ரூபாய் அதிகரித்து 255 ரூபாயாக அதிரடியாக உயர்த்தப்பட்டது.

🛑 நான்காவது திருத்தம்
மே மாத தொடக்கத்தில் ஒக்டேன் 95 பெட்ரோல் 15 ரூபாயாலும் (ரூபாய் 470), ஒக்டேன் 92 பெட்ரோல் 12 ரூபாயாலும் (ரூபாய் 410), ஒட்டோ டீசல் 10 ரூபாயாலும் (ரூபாய் 392) சுப்பர் டீசல் 15 ரூபாயாலும் (ரூபாய் 458) மண்ணெண்ணெய் 10 ரூபாயாலும் (ரூபாய் 265) அதிகரிக்கப்பட்டன.
ஐ.பி.எல் போட்டியில் சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி - இந்திய அணியில் இடம் - பக்கத்தில் முக்கிய புள்ளி
தற்போதைய திருத்தம்
🛑 ஐந்தாவது திருத்தம்
நேற்று நள்ளிரவு (அதாவது ஜூன் 01 ஆம் திகதிக்கு அதிகாலை) முதல் நடைமறைக்கு வந்த தற்போதைய திருத்தத்தின் படி ஒக்டேன் 95 பெட்ரோல் மேலும் 25 ரூபாய் அதிகரித்து 495 ரூபாயாகவும் ஒக்டேன் 92 பெட்ரோல் 24 ரூபாய் அதிகரித்து 434 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
ஒட்டோ டீசல் 15 ரூபாய் அதிகரித்து 407 ரூபாயாகவும் சுப்பர் டீசல் 20 ரூபாய் அதிகரித்து 478 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் 20 ரூபாய் அதிகரித்து 285 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

சதவீத அடிப்படையிலான விலை உயர்வு
பெப்ரவரி முதலாம் திகதி நிலவிய விலைகளுடன் தற்போதைய விலைகளை ஒப்பிடுகையில் கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்டுள்ள சதவீத அதிகரிப்பு
- ஒக்டேன் 95 பெட்ரோல்: 45.6%
- ஒக்டேன் 92 பெட்ரோல்: 48.6%
- ஒட்டோ டீசல்: 46.9%
- சுப்பர் டீசல்: 48%
- மண்ணெண்ணெய்: 56.6% (மிக அதிகபட்ச உயர்வு)
போக்குவரத்து பாதை
விலை உயர்வுக்கான பின்னணி
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இராணுவ மோதல்களின் காரணமாக மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலே இந்த விலை உயர்வுகளுக்கு முக்கிய காரணமாகும்.

உலகின் மிக முக்கியமான மசகு எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தற்போது வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் போதிலும் சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையின் தாக்கம், இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக இவ்வாறான தொடர் விலை அதிகரிப்புகளாகப் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |